மே 15க்கு பிறகு முதற்கட்ட தளர்வு; நியூயார்க் கவர்னர் சூசகம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மே 15க்கு பிறகு முதல்கட்டமாக உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறைகள் மீண்டும் திறக்கப்படலாம் என அம்மாநில கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ கூறியுள்ளார்.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நியூயார்க் மாகாணத்தில் மட்டும் இதுவரை 16,966 பேர் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்காவின் மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒருபங்கு ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நியூயார்க்கில் 367 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க நியூயார்க்கில் மே 15 வரை ஊரடங்கு இருக்கும் என கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், ஊரடங்குக்கு பிறகு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கியூமோ செய்தியாளர்களிடம் விளக்கினார்.


அவர் கூறியதாவது: மே 15க்கு பிறகு நியூயார்க்கில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகள் மீண்டும் திறப்பது, முதற்கட்ட திட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த தளர்வு நடவடிக்கைகள் மாகாணத்தின் வடக்கு பகுதியில் அப்ஸ்டேட் பிராந்தியங்களாக இருக்கும். நியூயார்க் பெருநகர பகுதியில் இருக்காது. அதேநேரத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள், அண்டை மாகாணங்களான நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட்டில் உள்ள அதிகாரிகளின் நடவடிக்கைகளை பொறுத்தது. இவ்வாறு கியூமோ கூறினார்.